காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் திரு. கே.பி. ஜெயக்குமார். இவரை கடந்த 2’ம் தேதி இரவு முதல் காணவில்லை என அவரது மகன் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ஜெயக்குமார் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலநாட்களுக்கு முன்பு ஜெயக்குமார் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது, பல கேள்விகளை மக்களிடம் எழுப்பியுள்ளது.
அவருடைய சடலத்தை மீட்ட போலீசார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த நிகழ்வு அரசியல் கட்சியினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்று, அரசியல் கட்சித்தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது சம்பந்தமாக, அறிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறுகையில், “காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது என அவர் தெவித்துள்ளார்.
இந்த நிகழ்வு சம்பந்தமாக காவல்துறையினர் பல கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர்.