நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு விரைவுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை (DIGITAL TRANSACTION) ஊக்குவிக்கும் அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசு விரைவுப் பேருந்துகளில் கடந்த ஏப்.1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இக்கருவியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யூ ஆர் குறியீடு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் இம்முறையில் அதிகபட்சமாக மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு விரைவு பேருந்துகளில் இனி சில்லறை பிரச்சனைகள் இருக்காது என பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.