இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதளமான ‛கூ’ நிதி நெருக்கடி காரணமாக நிரந்தமாக மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2019, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக கூ துவக்கப்பட்டது. பின்பு அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ ‛ கூ ‘ தளம் சமூக வலைதளமாக செயல்பட்டது. இந்த கூ நிறுவனத்தை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் துவக்கினர்.
துவங்கிய சில காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற கூ செயலியை தினமும் 21 லட்சம் பேர் பயன்படுத்தினர். மாதம் 1 கோடி பயனர்கள் வரை இருந்தனர். 9 ஆயிரம் பிரபலங்களும் தங்கள் கணக்குகளை இந்த சமூகவலைத்தளத்தில் வைத்து இருந்தனர். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வந்தது. இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது
சமீபகாலமாக நிதி நெருக்கடி காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. நிதி நெருக்கடியினால், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான், தற்போது அதன் பணியாளர்கள் செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் இந்த செயலியை நிரந்தரமாக மூட நிறுவனர்கள் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து வருவோம் என்றும் வேறு வழியில் நீங்கள் எங்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.