பழங்களில் அதிக சத்து மிக்க பழமாக ஆப்பிள் உள்ளது. கி.மு 6500ம் ஆண்டிலேயே ஆப்பிள் தோன்றியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஆப்பிள்கள் அதிகளவில் விளைகின்றன.
ரத்த சுத்திகரிப்புக்கும், ரத்த விருத்திக்கும் இதன் பங்கு முக்கியத்துவமாக உள்ளது. தற்போது ஆப்பிள் சீசன் களை கட்டி உள்ளது. வழக்கமாக தமிழகத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆப்பிள், சீசன் காலங்களில் மட்டும் விலை குறைகிறது.
தற்போது, சிம்லா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆப்பிள் சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டிற்கு ஆப்பிள் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. 24 கிலோ எடை கொண்ட சிம்லா ஆப்பிள் பெட்டி ஒன்றின் விலை குறைந்த பட்சம் 1400 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதிக சுவை கொண்ட காஷ்மீர் ஆப்பிள் பெட்டி ரூபாய் 1000 முதல் 1400 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.300, 250 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வேகமாக சரிந்துள்ளது.
இருப்பினும், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்கள் அதிக வரத்து காரணமாக விலை குறைந்த நிலையிலும் சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூபாய் 250 – 200 என அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.