திண்டிவனம் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து, சென்னை சாலையில் ரூ.27.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய நகராட்சி பஸ் நிலையம் கடந்த 4ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையத்தில் 67 கடைகள் அமைக்கப்பட்டு, அவை பொதுஏலத்தின் மூலம் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்திருந்தாலும், எதிர்பார்த்த அளவில் பஸ்களின் வருகை இல்லை. அரசு பஸ்கள் மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு மார்க்கங்களில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் புதிய நிலையத்திற்குள் செல்லாமல், வழக்கம்போல் மேம்பாலம் கீழ் உள்ள பழைய நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்குகின்றன.
இதனால் புதிய பஸ் நிலையம் பெரும்பாலான நேரங்களில் வெறிச்சோடியாக காணப்படுகிறது. அனைத்து ஊர்களுக்கும் பஸ் வசதி இருக்கும் என்ற நம்பிக்கையில் வரும் பயணிகள், சில பகுதிகளுக்கு பஸ்கள் இல்லாததால் ஏமாற்றமடைகின்றனர். தனியார் பஸ்களும் புதிய நிலையத்திற்குள் வரத் தொடங்கினால் மட்டுமே பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலை உருவாகும்.
இந்நிலையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் காவல்துறையும் இணைந்து, தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, புதிய பஸ் நிலையத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.