குரங்கம்மை பரவல் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் குரங்கம்மைக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கடிதத்தை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது. மேலும், குரங்கம்மை நோய் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறதாக அறியப்படுகிறது.
ஒருவருடன் ஒருவர் உடல் தொடர்பு ஏற்படுவதால் குரங்கம்மை பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தோலில் அரிப்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்பட்டால் குரங்கம்மையின் அறிகுறி எனக் கொள்ளலாம். உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
அதேபோல், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக குரங்கம்மை நோய் தாக்குகிறது. இதுவரையில், இந்தியாவில் புதிதாக யாருக்கும் குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை.
இருப்பினும், ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டம் மூலம் குரங்கம்மை நோய் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் குரங்கம்மை பரிசோதனைக்கு ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.