இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தங்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மக்களுக்கு சிறப்பானத் திட்டங்களை அறிவித்து வருகின்றன. அவ்வகையில் ஜார்க்கண்ட் மாநில அரசு விதவைப் பெண்களுக்கான சூப்பர் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி விதவை பெண்கள் மறுமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அந்த மாநிலத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த மறுமணம் உதவித் திட்டம் உதவும் எனத் தெரிவித்துள்ளார். மறுமணம் செய்யவிரும்பும் விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் மாற்றம் ஏற்பட்டு, சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. 2024-2024ம் நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை ஜார்க்கண்ட் அரசு தாக்கல் செய்தது.
இந்த மறுமண உதவித்திட்டம் அறிவிப்பு பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.