பிரதமர் மோடி அகமதாபாத் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து பின் மெட்ரோவில் பயணிகளுடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடம் வரையில் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இந்த ரயில் சேவைக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், அகமதாபாத் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், பச்சை கொடி காட்டி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார். சக பயணிகள், மாணவர்களிடமும் அவர் கலநத்துரையாடினார். இந்த நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட இருக்கிறது.
அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த ரயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதியம் உள்ளது.