தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல், Exit Poll) வெளியிடப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை : 230
ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 230 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாஜக 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் 97 முதல் 107 தொகுதிகளில் வெல்லும் எனவும் மற்ற கட்சிகள் 0-2 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன்கிபாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 102 முதல் 125 தொகுதிகள் வரை வெல்லும் எனவும், பாஜக 100 முதல் 123 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் மற்றவை 0-5 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.