வடலூரில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக, தொலைக்காட்சி வாயிலாக, செய்தித்தாள் மூலமாக, சமூக ஊடகங்கள் மூலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அத்தனை செய்திகளும் பொய்யான செய்திகள். அத்தனையும் வதந்திகள்.
ஊடகத்துறை புனிதமான துறை உங்களுடைய புனிதத்தை நீங்கள் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நாள் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கே பேசினார்கள், இங்கே பேசினார்கள், இது முடிந்து விட்டது, அது முடிந்து விட்டது என்றெல்லாம் வருகிற செய்திகள் பொய்யான செய்திகள்.
நாங்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம், உங்களிடம் தெரிவிப்போம். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கற்பனைக்காக உங்களுடைய அரசியல் சாயத்திற்காக எங்களைப் பற்றிய செய்திகளை திரித்து வெளியிடாதீர்கள்.
சில புகழ்பெற்ற ஊடகங்களும் இதில் அடங்குகின்றனர். ஊடகத்துறைக்கு அன்பான வேண்டுகோள் வைக்கின்றேன், உங்களுடைய அவசரத்திற்காக எங்களால் செயல்பட முடியாது. ஆதலால் மீண்டும் நான் சொல்கின்றேன் இன்னும் ஓரிரு வாரங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வமாக எங்கள் மூலமாக செய்தி வருகின்ற வரை, பொதுமக்கள் யாரும் எந்த செய்தி வந்தாலும் அதை நம்ப வேண்டாம்.
ஊடகங்கள் செயல்பாடு மிகவும் வருத்தமாக இருக்கிறது. சில பெயர்பெற்ற மூன்றாம் தர ஊடகம் இருக்கிறது, ஆனால் சில புகழ்பெற்ற ஊடகங்களும் அங்கே பேசி விட்டார்கள், இங்கே பேசிவிட்டார்கள், இப்படி ஆகிவிட்டது, அப்படி ஆகிவிட்டது என எப்போதும் எங்க கூடவே இருக்கிற மாதிரி பேசுகிறார்கள். என்ன அவசரம் உங்களுக்கு?
ஒரு கூட்டணி என்பது ஏதோ திடீரென வந்தோமா, முடித்தோமா என்று இருக்கப்போவது இல்லை. பல கட்சிகள் சார்ந்து இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறோம், இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவெடுப்போம், அதிகாரப்பூர்வமாக முதன் முதலில் உங்களுக்கு தான் அறிவிக்கப் போகிறோம்.
சிலர் எங்களைக் கொச்சைப்படுத்தி கொச்சையான செய்திகளை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனை கண்டிக்கின்றேன். நிறுத்திக் கொள்ளுங்கள். ஊடகத்துறை ஒரு புனிதமான துறை, சேவை துறை அந்த புனிதத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.