திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் மீது மற்றொரு பெண் கவுன்சிலர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் நகர மன்ற கூட்டம் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கமிஷனர் பானுமதி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்பான 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், 21வது வார்டைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தீபா மற்றும் 20வது வார்டைச் சேர்ந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் ரம்யா ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கிடங்கல் (2) பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் பணிகள் இன்னும் நிறைவுபெறாதது குறித்து பேசும்போது இருவரும் கடுமையாக வாதிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, கவுன்சிலர் தீபா திண்டிவனம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். நகர மன்ற கூட்டத்தின் போது தன்னை மிரட்டும் விதமாக பேசியதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நகர அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.