திண்டிவனம் அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தியை யொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வந்து ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும், அடுக்கு தீபம், கும்ப தீபம் மற்றும் பஞ்சமுக தீபாராதனை, கற்பூர ஆரத்தி, சத்திரங்கள் மூலம் சோடசா உபசாரங்கள் ஆகியவை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.