ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடப்பாண்டு இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்கும் எனத் தெரிகிறது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள் எல்லாம் தக்க வைக்கும் பிளேயர்களை ஏறக்குறைய இறுதி செய்துவிட்டன.
இந்த நிலையில் சமீபத்தில் சிஎஸ்கே நிர்வாகம் போட்ட பதிவால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
2025 ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதே சமயம், எம்.எஸ்.டோனி 2025’ல் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், டோனியின் நம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து ‘மேஜர் மிஸ்ஸிங்’ எனப் பதிவிட்டுள்ளனர். இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களில் சிலர் டோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும், சிலர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறப்போகிறது என்றும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வ விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை.
மேலும், சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வரவுள்ளார் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதனால், வரும் ஐபிஎல் தொடரில் டோனியின் ஓய்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்றே கூறப்படுகிறது.