இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ., (UPI) வசதி மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யு.பி.ஐ., வசதி உள்ளது.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாடுகளிலும் யு.பி.ஐ., மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், யு.பி.ஐ., தொடர்பாக இந்தியா – மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் யு.பி.ஐ., அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் யு.பி.ஐ., குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும். விரைவான பணப் பரிவர்த்தனை, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இதன்மூலம் சாத்தியமாகும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுவரை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யு.பி.ஐ., மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.