விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே எலவலப்பாக்கம் கிராமத்தில் டேபிள் பேன் ஒயர் மூலம் மின்சாரம் தாக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே எலவலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரவணன், கருத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், அதில் மூத்த மகன் 1ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் இசை அமுதனுக்கு மூன்று வயது ஆகின்றது. சரவணன் கும்பகோணத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தலைமை சமையலறாக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் எலவலப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று, அவரது இளைய மகன் இசை அமுதன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது திடீரென அவனது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மூச்சு பேச்சற்ற நிலையில் கிடந்தான். அதனையடுத்து குழந்தையை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இசை அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த, பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த டேபிள் பேன் ஒயரைக் குழந்தை பிடித்ததால் அதிலிருந்து வந்த மின்சாரம் தாக்கி இசை அமுதன் உயிரிழந்தது தெரியவந்தது.
மின்சாரம் தாக்கி மூன்று வயது குழந்தை பலியான சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.