விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புகழ்பெற்ற கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் கிட்டத்தட்ட 4,000 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். ஆரம்பத்தில் மாணவர்களுக்கு ஷிப்டு முறையில் இயங்கிய இக்கல்லுாரி, தற்போது முழு நேர கல்லுாரியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்திற்கு மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில், நேற்று காலை 10:00 மணியளவில், மீண்டும் ஷிப்டு முறையை கொண்டு வரவேண்டும், கல்லுாரியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்லுாரி விரிவுரையாளர்களும் பங்கேற்றனர். மாணவர்கள் போராட்டம் பற்றிய தகவலறிந்து வந்த ரோஷணை காவல் ஆய்வாளர் தாரனேஸ்வரி மாணவர்கள், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், கல்லூரி முதல்வர் தரப்பில் ஷிப்டு முறையில்தான் கல்லுாரி இயங்கும் என்பதில் உறுதியாக இருந்ததால், 3 மணி நேரமாக மாணவர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த தொடர் போராட்டங்களால் பல மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.