திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு பூட்டி இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வீடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்த நிலையில் நேற்று மாலை வெள்ளிமேடு பேட்டை பகுதியில் உள்ள நகை அடகு கடையில் தங்க நகைகளை அடகு வைக்க வந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை மாதம் பூட்டி இருந்த வீடுகளில் புகுந்து தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.