விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரில் குட்கா பதுக்குவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில், குற்றப்புலனாய்வு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலு, தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டில் 3 பேர், இன்னோவா காரில் இருந்து மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து, மூட்டைகளை சோதனை செய்ததில், குட்கா இருந்தது தெரிய வந்தது. டி.எஸ்.பி., சுனில், சம்பவ இடத்திற்கு சென்று பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினார். அதில், அவர்கள் மொரட்டாண்டி மாரியம்மன் கோவில் தெரு கணேஷ், 44; புதுச்சேரி நவசக்தி நகர் சபரிஷ், 31; கிளியனுார் இந்திரா நகர் பாஸ்கரன், 55; என தெரிந்தது.
சபரிஷ், கணேஷ் மூலம் திருவண்ணாமலையில் இருந்து கடத்தி வந்த குட்கா பொருட்களை, புதுச்சேரி, கிளியனுார் மற்றும் சுற்று வட்டார பகுதி கடைகளுக்கு சப்ளை செய்து வருவது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து, கணேஷ், சபரி, பாஸ்கரன் ஆகியோரை கைது செய்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட காரை சோதனை செய்ததில், புதுச்சேரி போலீஸ்காரர் ஒருவரின் அடையாள அட்டையின் நகல் இருந்தது. அவரை, கிளியனுார் போலீசார் தொடர்பு கொண்டு கேட்டனர்.
‘உறவினர் வீட்டில் வசித்தபோது பழக்கம் ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் என்னிடம் கார் வாங்கி சென்றார். அப்போது, காரில் வைத்திருந்த எனது ஐ.டி., கார்டை எனக்கு தெரியாமல் நகல் எடுத்து இருக்கலாம்’ என தெரிவித்தார்.