சட்டமன்றத்தில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நிகழ்த்திய உரையில், தமிழ்நாடு அரசின் முக்கிய கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.
அரசு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார் மற்றும் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் உரையில் குறிப்பிடப்பட்டது.
தமிழக அரசு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றும் என்றும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தொடரும் என்றும் ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை அரசின் அடிப்படை கொள்கைகளாக இருக்கும் என்றும், புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சம உரிமை, வெளிப்படையான அரசு தேர்வுகள் மற்றும் உலகத் தரத்திலான ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான திட்டங்களும் உரையில் இடம்பெற்றன.