தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதில் மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் அரசின் நிதி நிலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
வெள்ளை அறிக்கையின்படி, தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமையும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும், இந்தியாவின் முன்னணி வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது தேசிய சராசரிக்கும் கீழே சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளதுடன், கோவிட் காலத்தை விட மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வட்டிக்காக மட்டும் அரசு ரூ.67,000 கோடி செலுத்தி வருவதாகவும், மின்வாரிய குழுமத்தின் கடன் ரூ.2,47,130 கோடியாகவும், போக்குவரத்துக் கழகத்தின் மொத்த இழப்பு ரூ.72,667 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021–2026 காலகட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், இந்த ஐந்தாண்டு காலத்தில் பெறப்பட்ட கடன், தமிழகம் சுதந்திரம் பெற்ற பின் முதல் 60 ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்தக் கடனை விட அதிகம் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், வட்டி, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மொத்த நிதியின் 64 சதவீதம் செலவிடப்படுவதாகவும், மாநிலத்தின் திட்டச் செலவுகளுக்கு வெறும் 13 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.