இந்த ஆண்டு சந்தைகளிலும், மரங்களிலும் நாவல் பழங்கள் வழக்கத்தை விட அதிக அளவில் காய்த்திருப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் குறைவாக பழம் காய்த்த மரங்கள்கூட இந்த ஆண்டு ஏராளமான பழங்களை உதிர்த்து வருகின்றன.
தாவர அறிவியலின்படி, இந்த நிகழ்வு “மாஸ்டிங்” (Masting) அல்லது “ஸ்டிரெஸ் ஃப்ரூட்டிங்” (Stress Fruiting) எனப்படும் இயற்கை செயல்முறையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் அழுத்தம், நீர் பற்றாக்குறை அல்லது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணரும் மரங்கள், தங்களின் இனப்பெருக்கத்தை உறுதி செய்ய அதிகளவில் பழங்களை உற்பத்தி செய்கின்றன.
இதுபோன்ற சூழலில், புதிய இலைகள் மற்றும் கிளைகளை வளர்ப்பதை மரங்கள் குறைத்து, தங்களின் சக்தியை முழுமையாக விதைகள் மற்றும் பழங்களை உருவாக்குவதில் செலவிடுகின்றன. இதனால் கடந்த ஆண்டுகளில் குறைவாக காய்த்த மரங்கள்கூட இந்த ஆண்டு பழங்களால் நிரம்பியுள்ளன.
தாவரங்களின் ஆழமான வேர்கள் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை முன்கூட்டியே உணரக்கூடியவை. அதனால், அதிகளவில் நாவல் பழங்கள் காய்ப்பது வரவிருக்கும் வறட்சி அல்லது கடுமையான கோடைக்காலத்திற்கான இயற்கையின் முன்னெச்சரிக்கையாக சில ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
எனினும், ஒவ்வொரு ஆண்டும் அதிக விளைச்சல் ஏற்பட்டால் அது வறட்சி வருவதற்கான உறுதியான ஆதாரம் என்று கூற முடியாது. காலநிலை, மழைப்பொழிவு, மரங்களின் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணிகளும் இதற்கு பங்களிக்கின்றன என தாவர அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.