விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் கிராமத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பு வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன் மேற்கொண்ட கள ஆய்வின்போது, மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தின் பின்புறத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காணப்படும் விஷ்ணு சிற்பம் அடையாளம் காணப்பட்டது. சங்கு, சக்கரம், அபய முத்திரை உள்ளிட்ட பல்லவர் கால கலைப்பாணி அம்சங்கள் தெளிவாக இடம்பெற்றுள்ளன.
இந்த சிற்பம் கி.பி. 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது என்றும் மூத்த தொல்லியலாளர் கி. ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். சிற்பத்தின் அருகே பல்லவர் கால முருகன் சிற்பமும் காணப்படுவது, தைலாபுரம் பகுதியின் தொன்மையான வரலாற்றுக்கு மேலும் சான்றாக அமைந்துள்ளது.