திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சலவாதி பகுதியில் விபத்துக்கு காரணமாக இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர், செய்தி வெளியானதைத் தொடர்ந்து அதிகாரிகளால் மீண்டும் சரியான இடத்தில் அமைக்கப்பட்டது. இருப்பினும், தடுப்புச் சுவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைத்து, இருசக்கர வாகனங்கள் கடக்க முடியாத வகையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சலவாதி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரின் ஒரு பகுதியை சிலர் தங்கள் வசதிக்காக அகற்றி, வாகனங்கள் ‘யூ-டர்ன்’ எடுக்கும்படி மாற்றியிருந்தனர். இதனால் விபத்து அபாயம் அதிகரித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அகற்றப்பட்ட கான்கிரீட் தடுப்பை மீண்டும் அதன் பழைய இடத்தில் பொருத்தினர். இதையடுத்து அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் அம்மா டீ டைம் அருகே உள்ள அதிகாரப்பூர்வ ‘யூ-டர்ன்’ வழியாகவே பயணிக்கின்றன.
இருப்பினும், தடுப்புச் சுவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி வழியாக இருசக்கர வாகனங்கள் சாலையை கடக்கும் அபாயம் நீடிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தடுப்புச் சுவர்களை நகர்த்த முடியாத வகையில் நிரந்தரமாக சாலையில் பொருத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.